
'ஐடி நிறுவனங்களில் தொழிற்சங்கம் அமைக்க தடையில்லை' என்ற செய்தித் தலைப்பைப் பார்த்த மாத்திரமே எனக்கு, மென்பொருள் துறையிலும் BPO/Call center துறைகளிலும் பணியாற்றும் ஊழியர்களுக்குத் தொழிற்சங்கம் தேவையா இல்லையா என்று கடந்த வருடம் நாடு முழுவதும் விவாதம் நடைபெற்ற (பெற்றுக் கொண்டிருக்கிறது?) விஷயம் நியாபகத்திற்கு வந்தது. இந்த விவாதத்தை, தேசிய அளவில் இயங்கிக்கொண்டிருக்கும் மத்தியத் தொழிற்சங்கத்தினர், குறிப்பாக இடதுசாரி தொழிற்சங்கத்தினர் (CITU மற்றும் AITUC) மட்டும்தான் பெரிதாக எடுத்துக்கொண்டார்களே தவிர, மேலே குறிப்பிட்ட இந்தத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் இதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை.
இதற்கிடையில், கடந்தவாரம், சென்னையில் மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்புத்துறை இணையமைச்சர் திரு. ஆஸ்கார் ஃபெர்னாண்டஸ், சத்தியமூர்த்தி பவனில், செய்தியாளர் கூட்டத்தில் பேசும்போது, 'தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் தொழிற்சங்கங்கள் அமைக்க எவ்விதத் தடையும் இல்லை' என்று தெரிவித்தார். மேலும் அவர், தகவல் தொழில் நுட்பத்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கென்று தனியாகத் தொழிலாளர் சட்டத்தை உருவாக்க முடியாது என்றும், ஏற்கனவே உள்ள தொழிலாளர் நலச்சட்டமே அவர்களுக்குப் பொருந்தும் என்றும் அவர் கூறினார். குறிப்பாக 3 மற்றும் 4-ஆவது பிரிவுகளைச் சார்ந்த தொழிலாளர்கள், நலச்சட்டத்துக்குள் வருவார்கள் என்று கூறிய அவர், அதிகாரிகள் இந்தச் சட்டத்திற்குள் வரமாட்டார்கள் என்றும், மென்பொருள் துறை ஊழியர்கள் தங்களுக்கென்று தொழிற்சங்கத்தை அமைத்துக்கொள்ள அவ்வித தடையும் இல்லல என்றும் ஆஸ்கார் ஃபெர்னாண்டஸ் தெரிவித்தார். இப்போது, மத்திய மந்திரி வேறு கோடி காட்டிவிட்டார். இனி IT/ITES துறை வளாகங்களிலும் கேட்குமா.. 'தொழிலாளர் ஒற்றுமை, தொழிற்சங்க ஒற்றுமை' கோஷங்கள்? வேலை நிறுத்தம், ஒருமணி/இரண்டுமணி நேர வெளிநடப்பு, கையெழுத்து இயக்கம், work-to-rule, go-slow attitude, ஒத்துழையாமை, மதிய இடைவேளை ஆர்ப்பாட்டம், pen-down (அல்லது mouse/keyboard down) போன்ற போராட்டங்கள்... IT/ITES துறைகளிலும் அரங்கேறுமா? முதலில் ஒரு தொழிற்சங்கம் தோன்றி, பின்னர் அது உடைந்தும், அதிலிருந்து இன்னொன்று உடைந்தும், காலப்போக்கில் படிப்படியாக பல தொழிற்சங்கள் உருவாகி, ஏற்கனவே தொழிற்சங்கரீதியில் பிளவுபட்ட தொழிலாளர்களை மேலும் பிளக்க சாதி, மத, ப்ராந்திய அடிப்படையிலான சங்கங்களும் தோன்றி, கடைசியில், எல்லாமே அரசியற்கட்சிகளின் கைப்பாவைகளாய்த் தேய்ந்து, ஊழியர்களின் உண்மையான நலனெல்லாம் கேள்விக்குறியாகுமோ? இன்று, தொலைதொடர்புத் துறையில் நடப்பது போன்று, caught between devil and the deep sea என்பது மாதிரி, பாரபட்சமாகச் செயல்படும் தொழிற்சங்கத்துக்கும் தாந்தோன்றித்தனமாக செயல்படும் நிர்வாகத்திற்கும் இடையில் சிக்கித்தவிக்கும் நிலை IT/ITES துறை அப்பாவி ஊழியருக்கு ஏற்படாது என்பது என்ன நிச்சயம்?
எது எப்படியோ, இன்று BPO/call centerகள் data security, identity protection விவகாரங்களில் மேலைநாட்டு கெடுபடிகளுக்குப் பயந்து தங்களது அலுவலக அணுகுமுறையை மாற்றி அமைத்ததுபோல, தொழிலாளர்/ஊழியர் நலனிலும் பாதுகாப்பிலும் போதுமான அக்கறையுடன் செயல்படுவதாகத் தெரியவில்லை. கடந்த ஆண்டு, பெங்களூரில் உள்ள Call centerல் பணிபுரிந்த இளம் பெண்ணொருத்தி வன்கொடுமைக்கு ஆளாகிப் பலியாகியுள்ள விஷயம், பெங்களூரையே பரபரப்பாக்கியது. நேற்று இதே போன்றொரு கொடுமையான சம்பவம் புனேவில் நடந்தேறியுள்ளது
இந்நிலையே தொடர்ந்தால், நிச்சயம் இத்துறையில் தொழிற்சங்கம்(கள்) தோன்றுவது தவிர்க்க முடியாததாகிவிடும். சில இடங்களில், இவைகளில் பணிபுரியும், அதிகாரிகளேகூட தொழிற்சங்கம் என்று இல்லாவிட்டாலும் ஊழியர் சார்பாக 'ஒரு pressure group' ஒன்று வந்தால் தேவலை என்று கருதத் துவங்கிவிடுவார்கள்.
News:
Pune Tragedy Labels: News, செய்தி