பாரதிய நவீன இளவரசன்

yes.....................yet another also-ran in the world of கிரிக்கெட், காதல், சினிமா, அரசியல், இலக்கியம்...of course, இந்த ப்ளாகர் உலகிலும்தான்.

Wednesday, October 31, 2007

லா ச ரா



லாசரா என இலக்கிய வட்டத்தில் நன்கு அறிமுகமானவரும், 'லாசராவின் சிறுகதைகளைப் படிக்காதவர்கள் சிறுகதைகளைப் பற்றிப் பேசவே அருகதையற்றவர்கள்' என்று எழுத்தாளர் சுஜாதா கூறுமளவிற்கு சுஜாதாவிடமும் பல வாசகர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியவருமான லால்குடி சப்தரிஷி ராமாம்ருதம் அவர்கள் நேற்று மறைந்த செய்தியை சன் தொலைக்காட்சியின் செய்தியோடை மூலமாகத்தான் தெரிந்து கொண்டேன்.

இன்று காலை, இணையத்தில் அவரைக் குறித்த மேல் விவரங்களுக்காகத் தேடிய போது அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் அமைந்த idlyvadai thoughtsintamil மற்றும் thulasidhalam பதிவுகளைக் காண நேர்ந்தது.

கல்லூரி கடைசியாண்டில் மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் மின்சார வண்டிக்காகக் காத்திருக்கும் இடைப்பட்ட நேரத்தில், எனது வகுப்புத்தோழன் கல்யாணராமன், யார் யாருடைய எழுத்தையெல்லாம் அவசியம் படிக்கவேண்டுமென்று ஒரு பட்டியல் போட்டுக் கொடுத்தான். புதுமைபித்தன், கு.ப.ரா., மௌனி, கு, அழகிரிசாமி, நா. பிச்சமூர்த்தி... என நீண்ட அந்தப் பட்டியலில் சுஜாதா, ஜெயகாந்தன் எல்லாம் இல்லையே என்றேன். 'நான் சொல்லாவிட்டாலும், நீ அவர்களை எல்லாம் வாசிப்பாயே... அப்புறம்... மிக முக்கியமாய், 'லா.ச.ரா-வைப் படி' என்று அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அவன் செல்லவேண்டிய வண்டிவர நானும் விடைபெற்றேன். வீட்டுக்குவந்தபோது ஒரு இனிய ஆச்சர்யமாக அந்த வார குமுதம் அட்டையில் லாசரா இருந்தார். லாசரா அப்படிதான் எனக்கு அறிமுகம். அப்போதெல்லாம், குமுதம் பத்திரிகையை ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பிரபலஸ்தரும் தயாரித்து வழங்குவதுபோல வெளிவரும் குமுதம். அந்தமுறையில், அந்த வாரக் குமுதம் லா.ச.ராவின் கைவண்ணத்தில் வந்தது.

1995 உலகத்தமிழ் மாநாடு சமயத்தில் (அல்லது அதற்கு சற்று முன்னதாகவோ) தமிழில் சிறந்த சிறுகதைகள் என்று மாலன் தொகுத்து வெளியிட்டிருந்த ஒரு சிறுகதைத் தொகுப்பில் 'பாற்கடல்' என்ற லாசராவின் சிறுகதையை முதன் முறையாக வாசித்தேன். திரும்பத் திரும்பப் படிக்க வைத்ததும், ஒவ்வொருமுறை வாசிக்கும்போதும் வேறு வேறுவிதமான உணர்ச்சிகளைத் தந்ததும் லாசராவின் அற்புதப் படைப்பான 'பாற்கடல்' சிறுகதைதான். நான் வாசித்த சிறுகதைகளிலேயே என்னுள் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்திய சிறுகதை அதுதான். அந்தத் தாக்கத்திலேததன் நாங்கள் 1996வாக்கில் தஞ்சையில் நாங்கள் நடத்திய கையெழுத்துப் பத்திரிக்கைக்கு 'பாற்கடல்' என்று பெயரிட்டிருந்தோம்.

இணையத்தில் 'பாற்கடல்' சிறுகதையினை நான் தேட முற்பட்டபோது கிடைத்த அச்சிறுகதையின் துவக்க வரிகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

கூட்டுக்குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டவள் ஜகதா. தலைத்தீபாவளி. ஆனால், கணவனோ அலுவலகவேலை விஷயமாக வெளியூரில். கதை ஆரம்பிக்கிறது - "நமஸ்காரம், ஷேமம். ஷேமத்திற்கு எழுதவேணுமாய்க் கேட்டுக்கொள்கிறேன். நீங்களோ எனக்குக் கடிதம் எழுதப் போவதில்லை. உங்களுக்கே அந்த எண்ணமே இருக்கிறதோ இல்லையோ? இங்கே இருக்கும் போதே, வாய் கொப்புளிக்க, செம்பில் ஜலத்தை என் கையிலிருந்து வாங்க, சுற்றும் முற்றும் திருட்டுப்பார்வை, ஆயிரம் நாணல் கோணல். நீங்களா கட்டின மனைவிக்கு கடிதம் எழுதப் போகிறீர்கள்? அதனால் நானே முந்திக் கொண்டதாகவே இருக்கட்டும். அகமுடையான் உங்கள் மாதிரியிருந்தால்தானே, என் மாதிரி பெண்டாட்டிக்குப் புக்ககத்தில் கெட்ட பேரை நீங்களே வாங்கி வைக்க முடியும்? 'அவள் என்ன படிச்ச பெண், படிச்ச படிப்பு எல்லாம் வீணாய்ப் போகலாமா? ஆம்படையானுக்குக் கடிதாசு எழுதிக்கிறாள்!' என்று வீட்டுப் பழைய பெரியவாள், புதுப் பெரியவாள் எல்லாம் என் கன்னத்திலடிக்காமல், தன் கன்னத்திலேயே இடித்துக்கொண்டு, ஏளனம் பண்ணலாம்! பண்ணினால் பண்ணட்டும்; நான் எழுதியாச்சு. எழுதினது எழுதினதுதான். எழுதினதை நீங்கள், தலைத்தீபாவளியதுவுமாய், அவ்வளவு தூரத்திலிருக்கிறவர், படித்தது படித்ததுதான். எழுதினதைப் படித்தபின், எழுதினவாளும், படித்தவாளும் குற்றத்தில் ஒண்ணுதானே? வேறு எதிலும் ஒற்றுமையிருக்கிறதோ இல்லையோ?.."

"எழுதினதைப் படித்தபின், எழுதினவாளும், படித்தவாளும் குற்றத்தில் ஒண்ணுதானே?"


சிறுகதையின் முடிவில் வரும் சில வரிகள்...

"குடும்பம் ஒரு பாற்கடல். அதிலிருந்து லக்ஷ்மி, ஐராவதம், உச்சஸ்ரவஸ் எல்லாம் உண்டாயின. அதிலிருந்து முளைத்துத்தான் எனக்கு நீங்கள் கிட்டினீர்கள். ஆலகால விஷமும் அதிலிருந்துதான் உண்டாகியது; உடனே அதற்கு மாற்றான அம்ருதமும் அதிலியே தான்..." see his natural flow of words... thats his speciality.

***

லாசராவின் மற்றொரு சிறுகதையை சுப்பிரம்மணிய ராஜுவின் நினைவாக மாலன் 'அன்புடன்' என்ற தலைப்பில் தொகுத்து வெளியிட்ட ஒரு சிறுகதைத் தொகுப்பில் கண்டேன். அவள் என்ற அந்தச் சிறுகதையும், மற்றும் இந்தியா டூடேயில் ஒரு 15 வருடத்திற்கு முன்பாக பாப்பு என்ற சிறுகதையும் என்னை அதிகம கவர்ந்த அவரது மற்ற படைப்புகள்.



பாற்கடல், அவள், பாப்பு ஆகிய சிறுகதகள் இணையத்தில் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால், திண்ணையில் லாசராவின் சில சிறுகதைகள் இருக்கிறது.


***

1996வாக்கில் நான் எனது நண்பன் சாமிநாதன் மற்றும் அவன் சகோதரன் குற்றாலம் சுந்தரராமன் ஆகியோருடன் சேர்ந்து நடத்திய 'பாற்கடல்' என்ற எங்களது கையெழுத்துப் பத்திரைகையை லாசராவின் கருத்துக்களைப் பெற லாசராவுக்கு அனுப்பிவைத்தோம். லாசராவின் தீவிர வாசகர்களான அந்த குற்றாலம் சகோதரர்கள் சொல்கிறார்களே என்றுதான் நான் அனுப்பி வைத்தேன். ஆனால், மிகுந்த சிரத்தையுடன் எனக்கு அவர் பதில் எழுதியது என்னை பெரும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

பதினோரு வருடத்திற்கு முன்பாக எனக்கெழுதிய அந்தக் கடிதத்தில் 'கையெழுத்துப் பத்திரிக்கைகள் சாதாரணமாக ஆரம்பிக்கப்படுவது உற்சாகத்தில் அல்லது ஆசாபங்கத்தில் (தன் சிருஷ்டிகள் அச்சுக் காணமுடியவில்லையே எனும் ஆதங்கத்தில்)' என்றும் 'உண்மையான எழுத்தார்வமும், சிரத்தையும்தான் கையெழுத்துப் பத்திரிக்கையின் அடிப்படையாயிருத்தல் வேண்டும். எழுத்துப்பத்திரிக்கை ஒரு சோதனைக்கூடம். அச்சுக் கோர்வையில் செய்ய முடியாததைக் கையெழுத்துப் பத்திரிக்கை சாதித்து ஆத்மாவிற்கு திருப்தி ஏற்படவேண்டும்' என்று கையெழுத்துப் பத்திரிக்கை முயற்சி குறித்துச் சொன்ன லாசரா இன்று வலைப்பதிவு முயற்சி பற்றியும் அதைத்தான் சொல்லியிருப்பார்.

***

May his soul rest in peace. My heartfelt condolences to his family and friends.

6 Comments:

At 11:56 PM, Blogger துளசி கோபால் said...

அருமையான அஞ்சலி.
அவர் கைப்பட எழுதுனதை இங்கே வெளியிட்டதுக்கும் நன்றி.
அவரோட 'கோட்டுக்கு வயசு முன்னூறு' குமுதத்தில் படிச்ச ஞாபகம்.
என்ன ஒரு நீரோட்டமான நடை..... ஆம்படையானுக்கு எழுதுன அந்தக் கடுதாசிதான்!!!!!

 
At 5:39 PM, Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இன்று வலைப்பதிவு முயற்சி பற்றியும் அதைத்தான் சொல்லியிருப்பார்//

முத்தாய்ப்பான வரிகள்!
அவரின் கையெழுத்தை இங்கு இட்டமைக்கும் நன்றி!

லாசரா பற்றி மலர்மன்னன் திண்ணையில் எழுதிய கட்டுரை இதோ!
http://www.thinnai.com/?module=displaystory&story_id=60711012&format=html

 
At 10:21 AM, Blogger பாரதிய நவீன இளவரசன் said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி, துளசி கோபால், கண்ணபிரான் ரவி ஷங்கர் அவர்களே.

லா.ச.ராமாமிருதம் அவர்கள் எனக்கு எழுதிய கடிதத்தை இன்றுவரை பத்திரமாக (பொக்கிஷமாக) பாதுகாத்ததற்கும், இங்கு வெளியிடக் காரணமானதற்கும் என் மனைவிதான் உண்மையில் நன்றிக்கு உரியவர். உங்கள் சார்பாக நான் அவரிடன் நன்றியைச் சொல்லிவிட்டேன்.

 
At 7:19 PM, Blogger கானகம் said...

அய்யா உங்களை ஒரு சாதாரன வலைப் பதிவாளனாக நினைத்து கண்டுகொள்ளமல் விட்டு விட்டதற்காக வருந்துகிறேன். என்ன அருமையான அஞ்சலி லா.ச.ரா அவர்களுக்கு. நானும் சில குழுமங்களில் உறுப்பினராய் உள்ளேன். அங்கும் இதைவிட அதிகமாய் அவருக்கு அப்ஜ்சலி செலுத்தப் பட்டது. இன்றுவரை அவரது எழுத்துக்களை படிக்காமல் விட்டதை நினைத்து வருத்தப் படுகிறேன்.

உங்கள் நடை எழுத்தின் லாவகம் மற்றூம் சொல்ல வந்ததை குறிப்பாய் சொல்லும் பாங்கு எல்லாம் அருமை. இந்தப் பதிவை படிப்பதற்கு முன்னரே உங்கள் பதிவுக்கு தொடர்ந்து வருவேன் என எழுதி இருந்தேன். இப்போது மீண்டும் சொல்கிறேன்.. உங்கள் பதிவுக்கு எனது வருகை தினம் இருக்கும்.

வாழ்த்துக்களுடன்,

ஜெயக்குமார்

 
At 1:43 PM, Blogger பாரதிய நவீன இளவரசன் said...

நன்றி கானகம். தங்கள் வரவு நல்வரவாகுக.

 
At 1:53 PM, Blogger கானகம் said...

கடிதங்கள ரொம்பநாள பாக்கல போலிருக்கு???

 

Post a Comment

<< Home