பாரதிய நவீன இளவரசன்

yes.....................yet another also-ran in the world of கிரிக்கெட், காதல், சினிமா, அரசியல், இலக்கியம்...of course, இந்த ப்ளாகர் உலகிலும்தான்.

Thursday, February 28, 2008

சுஜாதா

சுஜாதாவும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமும் தோன்றும் புகைப்படம்.

காலை 7 மணி அளவில் (படுக்கையிலிருந்து எழ எத்தனித்த நேரத்தில்) பக்கத்து ஹால் டிவி, ஜெயா செய்திகளின் தலைப்புச் செய்திகளில் பிரபல எழுத்தாளர் மறைவு குறித்த செய்தியைச் சொல்லிக் கொண்டிருந்தது. அந்த எழுத்தாளர் யார் என்பது என் காதில் விழவில்லை. ஆதலால், ஹாலில் மேஜை மேலிருந்த ஹிந்து நாளிதழைப் புரட்ட வேண்டியதாயிற்று; பத்தாவது பக்கத்தில் கீழே சுஜாதாவின் புகைப்படத்தையும் போட்டு, செய்தி வெளியிட்டிருந்தார்கள் - 'Sujatha, prolific writer, dead' என்று. அதற்குள் ஜெயாவின் விரிவான செய்திகளில் சுஜாதா அவர்கள் மறைவு பற்றிய செய்தியும் வர, ஆழ்ந்த துக்கத்துக்குள்ளானேன்.


உடனே, கணினியை இயக்கி, இணையத்தில் மேல்விவரங்களுக்காக நான் தேட முற்பட்டது தேசிகனது இந்த வலைத்தளத்தையே (http://www.desikan.com/).
நேற்று இரவே (9.22 மணி, 27-பிப்ரவரி 2008) சுஜாதா அவர்கள் ஆச்சாரியான் திருவடியை அடைந்த செய்தியையும், அப்பதிவில் பலர் வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியையும் வாசித்து, எனது இரங்கலையும் தெரிவித்துவிட்டு, இந்தப் பதிவை எழுதுகிறேன்.


பெரிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை. இலட்சோபலட்சம் சுஜாதா ரசிகர்களில் நானும் ஒருவன். சுஜாதாவிடம் எனக்கு அதிகம் பிடித்தது எல்லோருக்கும் பிடித்த அவரது கதைசொல்லும் முறை; எளிமையாகவும் சுவாரசியமாகவும் இருக்கும் அவரது எழுத்து நடை.


ஒருமுறை எனது கல்லூரியில் 'எனக்குப் பிடித்த எழுத்தாளர்' என்ற தலைப்பில் மாணவர்களை எழுதச் சொன்னபோது, நான் சுஜாதாவின் கதைகளைப் பற்றி எழுதலானேன். ஆனந்தவிகடன், குமுதம் பத்திரிக்கையில் தொடர்கதைகளாக வந்த சுஜாதாவின் கதைகளான ப்ரியா, ரத்தம் ஒரே நிறம், கொலையுதிர் காலம், பிரிவோம் சந்திப்போம், வாய்மையே சிலசமயம் வெல்லும், விக்ரம், என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ.... என்ற நீண்ட பட்டியலை, அருகில் வந்து எட்டிப்பார்த்த என் ஆசிரியர்.. "தம்பி, சுஜாதாவின் படைப்புகளிலேயே மிகவும் சிறப்பானது 'கரையெல்லாம் செண்பகப்பூ'. அதை நீ வாசிக்கவில்லையா?" என்று வினவியதோடு நிறுத்தாமல், சுஜாதாவின் சிறுகதைத் தொகுப்புகளையும், நாடகங்களையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

அதுமுதல், சுஜாதாவின் எழுத்துக்களை, அவரது பேட்டிகளை, அவர் பற்றிய அவரது ரசிகரது எழுத்துக்களை நான் படிக்கத்தவரவில்லை. என் படிப்பார்வத்தை மேலும் பெருக்கிய எழுத்தாளர்களில் முதன்மையானவர் சுஜாதா.

அவருடைய பிரிவால் வாடும் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.


***
தனது 70ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு 'கற்றதும் பெற்றதும்' பகுதியில் சுஜாதா அவர்கள் எழுதியது:
மே மாதம் மூன்றாம் தேதி, எனக்கு எழுபது வயது நிறைகிறது. இதற்கான அடையாளங்கள் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன். மெரீனாவில் நடக்கும்போது எதிர்ப்படுபவர்கள் பெரும் பாலும் என்னைவிட சின்ன வயசுக்காரர்களாகத் தெரிகிறார்கள். ஒரு தாத்தா மாட்டினார். நிச்சயம் என்னைவிட மூத்தவர். சிமென்ட் பெஞ்சில், என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்.
"யு ஆர் எ ரைட்டர்! எனக்கு எத்தனை வயசு சொல்லுங்க, பார்க்கலாம்!" என்று கண் சிமிட்டலுடன் கேட்டார். நான் யோசித்து, ‘‘கட்டை விரலால் மூக்கைத் தொடுங்கோ" என்றேன்.
"எதுக்குப்பா?"
"தொடுங்களேன்!"
சற்று வியப்புடன் தொட்டார்.
"மத்த விரல்களை றெக்கை மாதிரி அசை யுங்கோ!" என்றேன். ‘‘இதிலிருந்து கண்டுபிடிச்சுட முடியுமா, என்ன?’Õ என்று, விரல்களைச் சொன்னபடி அசைத் தார்.
"ரெண்டு கையையும் பரப்பி, ஏரோப்ளேன் மாதிரி வெச்சுண்டு ஒரே ஒரு தடவை லேசா குதிங்கோ. பாத்து... பாத்து..."
"இது என்னப்பா ட்ரிக்கு?" என்று அப்படியே செய்தார்.
"உங்களுக்கு இந்த மே பன்னண்டு வந்தா எண்பத்தோரு வயசு!" என்றேன்.
அசந்து போய், "கை குடு. எப்படிப்பா இத்தனை கரெக்டா சொன்னே?"
"ஒரு ட்ரிக்கும் இல்லை, சார்! நேத்திக்குதான் இதே பெஞ்சில், இதே சமயம் வந்து உட்கார்ந்து, உங்க வயசு, பர்த்டே எல்லாம் சொன் னீங்க. மறந்துட் டீங்க!" என்றேன். தாத்தா மாதிரி அத்தனை மோசம் இல்லை என்றாலும், எனக்கும் சமீபத்திய ஞாபகங்கள் சற்றே பிசகுகின்றன. ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்குச் சென்றால், எதற்காக வந்தோம் என்பது மறந்தே போகிறது. பெயர்கள் ஞாபகம் இருப்பதில்லை. ஆந்தைக்கு இங்கிலீஷில் என்ன என்று சட்டென நினைவு வருவதில்லை. ‘படையப்பா’வில் ரஜினிக்கு முன்னால் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்தாரே... அந்த நடிகை யின் பெயர் என்ன என்று ஒரு நாள் அதிகாலை கண் விழித்ததும், ஒரு மணி நேரம் யோசித்தேன், கிட்டவில்லை.
மனைவி எழக் காத்திருந்து அவளிடம் கேட்டேன். "ரம்யா கிருஷ்ணன்" என்றாள். இம்மாதிரி, நியூரான்கள் களைத்துப் போவது தெரிகிறது. ஆனால், நீண்ட நாள் ஞாபகங்கள் பத்திரமாக இருக்கின்றன. அது மூளையில் வேறு பேட்டை போலும்! கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன், சின்ன வயசில் கோயமுத்தூரில் அம்மா\அப்பாவுடன் ஜட்கா வண்டியில் "ஜகதலப்ரதாபன்" சினிமா போனது, ஒண்ணாம் கிளாஸ் டீச்சருக்கு ஆனந்த விகடனும், அமிர்தாஞ்சனும் கொண்டு போய்க் கொடுத்தது, பள்ளி மணியை அகாலமாக அடித்தது, எனக்குத் தம்பி பிறந்தது... இதெல்லாம் தெளிவாக ஞாபகம் உள்ளது. ஸ்ரீரங்கத்துக் கதைகள் அனைத்தும் என் நீண்ட நாள் ஞாபகங்களின் வடிவம்தான்!
டெல்லியில், பெட்ரோல் எழுபத்தைந்து பைசாவும், பால் ஐம்பத்தைந்து பைசாவும் கொடுத்து வாங்கி தாராளமாக வாழ்ந்தது, என் முதல் கதை, முதல் நாவல் பிரசுரமானது, எஸ்.ஏ.பி'யின் கடிதக் குறிப்பு எல்லாம் ஞாபகம் உள்ளது. ரம்யா கிருஷ்ணன் போன்ற மேட்டர்தான் சட்டென்று வழுக்கிவிடுகிறது.
மெரீனாவில், ஷார்ட்ஸ் ஸ்னீக்கரில் ஓடும் இளைஞர்களைப் பார்த்து முன்பு பொறாமைப்படுவேன். இப்போது புன்னகைக்கிறேன். பொதுவாகவே, பொறாமைப்படுவதற்கான விஷயங்களும், அதட்டிச் சொல்வதற்கான விஷயங்களும் குறைந்து வருகின்றன. ஹிந்துவின் "ஆபிச்சுவரி" பார்க்கையில், இறந்தவர் என்னைவிட சின்னவரா, பெரியவரா என்று முதலில் பார்ப்பேன். சின்னவராக இருந்தால், ‘பரவால்லை... நாம தப்பிச்சோம்!’ என்றும், பெரியவ ராக இருந்தால் கழித்துப் பார்த்து, ‘பரவால்லை... இன்னும் கொஞ்ச நாள் இருக்குÕ என்றும் எண்ணுவேன். எதிர்காலம் என்பதை இப்போதெல் லாம் வருஷக் கணக்கில் நினைத்துப் பார்ப்பது இல்லை. மாதக் கணக்கில்... ஏன், உடம்பு சரியில் லாமல் இருக்கும்போது வாரக் கணக்கில், நாள் கணக்கில் அந்தந்த நாளை வாழத் தோன்றுகிறது. Today I am alright, thank God!
சயின்ஸ் அதிகம் படித்ததால், கடவுளைப் பற்றிய குழப்பங்கள் தீர்க்க முடியாமல் இருக்கின்றன. யேட்ஸ் சொன்னதுபோல், "சிலர் கடவுள் இருக்கிறார் என்கிறார்கள். பிறர் கடவுள் இல்லை என்கிறார்கள். உண்மை ஒருக்கால் இரண்டுக்கும் இடையில் எங்கோ இருக்கிறது!".
ஆனால், டி.என்.ஏ. ரகசியத்தையும், உயிரின வேறுபாடுகளையும், அண்டசராசரங்களின் அளவையும் பார்க்கும்போது, நம்மை மீறிய சக்தி புலன் உணர்வுக்கும், நம் அற்ப வார்த்தைகளுக்கும் அகப்படாத ஒரு சக்தி இருப்பதில் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. நான் நாத்திகன் அல்ல. மிஞ்சிப்போனால், ரஸ்ஸல் படித்தபோது ‘அக்னாஸ்டிக்’காக அதாவது, கடவுள் இருப்பைப் பற்றித் தெரியாதவனாக இருந்திருக்கிறேன். மறுபிறவியில் எனக்கு நம்பிக்கை இல்லை. பிறந்தால் இதே ஞாபகங்கள், இதே முதுகுவலியுடன் தமிழ்நாட்டில் பிறக்க வேண்டும். தமிழில் மீண்டும் கதைகள் எழுத வேண்டும். நடக்கிற காரியமா? முற்றிலும் புதிய பிறப்பு, தேசம், பெயர், உடல் என்றால் அது மறுபிறவி அல்ல... வேறு பிறவி. மேலும், எங்கேயாவது ஸ்விஸ் நாட்டில் பிறந்து வைத்தால், பாஷை தெரியாமல் கஷ்டப்படுவேன்.
இறந்ததும் என்ன ஆகிறது என்பதைப் பற்றி நசிகேதனைப்போல யோசிக்கும் போது, சட்டென்று ஒரு திடுக்கிடல் ஏற்படும். அந்தச் சமயத்தில் மல்லிகை வாசனையையோ, ஒரு குழந்தையின் புன்சிரிப்பையோ எண்ணிப் பார்த்துக் கவனத்தைக் கலைத்துக்கொள்வேன். சொர்க்கம், நரகம் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இரண்டும் இங்கே தான் என்று எண்ணுகிறேன். அப்படி ஒருக்கால் இருந்தால், நரகத்துக்குப் போகத்தான் விரும்புகிறேன். அங்கே தான் சுவாரஸ்யமான ஆசாமிகள் இருப்பார்கள். சொர்க்கத்தில், நித்ய அகண்ட பஜனைச் சத்தம் எனக்கு ஒரு நாளைக்கு மேல் தாங்காது.
ஆரம்பத்தில் இளைஞனாக இருந்த போது, ஏரோப்ளேன் ஓட்டவும், கித்தார் வாசித்து உலகை வெல்லவும், நிலவை விலை பேசவும் ஆசைப்பட்டேன். நாளடைவில் இந்த இச்சைகள் படிப்படி யாகத் திருத்தப்பட்டு, எளிமைப்படுத்தப் பட்டு, எழுபது வயதில் காலை எழுந் தவுடன் சுகமாக பாத்ரூம் போனாலே சந்தோஷப்படுகிறேன். வாழ்க்கையே இவ்வகையில் progressive compromises (படிப்படியான சமரசங்களால் ஆனது).
இன்றைய தினத்தில், என் டாப்டென் கவலைகள் அல்லது தேவைகள் என்றால்... முதலிடத்தில் உடல் நலம், மனநலம், மற்றவருக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருப்பது, தெரிந்தோ தெரியாமலோ யார் மனதையும் புண் படுத்தாமல் இருப்பது, இன்சொல், அனுதாபம், நல்ல காபி, நகைச்சுவை உணர்வு, நான்கு பக்கமாவது படிப்பது, எழுதுவது போன்றவை பட்டியலில் உள்ளன. பணம் அதில் இல்லை. முதலிலேயே அது லிஸ்ட்டை விட்டுப் போய்விட்டது.
தி.ஜானகிராமனின் "கொட்டு மேளம்" கதையில் வரும் டாக்டருக்குப் போல, மனைவி அவ்வப்போது வர வேண்டிய பணத்தையும், ஏமாற்றிய ஜனங்களை யும் எனக்குச் சொல்லிக் காட்டுவாள். அவளும் இப்போது இதில் பயனில்லை என்று நிறுத்திவிட்டாள். பணம் பிரதானமாக இல்லாததால், இன்று எழுபது வயசில் மனச்சாட்சி உறுத்தாமல் வாழ முடிகிறது. ஜெயிலுக்குப் போன தில்லை. ஒரே ஒரு தடவை டில்லியிலும், ஒரு தடவை பெங்களூரிலும் ஒன்வேயில் ஸ்கூட்டர் ஓட்டியதால், மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுக்குப் போயிருக்கிறேன். வோட்டிங் மெஷினுக் காக சாட்சி சொல்ல, கேரளா ஹைகோர்ட் டில் இருந்து சுப்ரீம் கோர்ட் வரை போயிருக்கிறேன்.
அம்பலம் இணைய (www.ambalam.com) இதழில் ஒரு வாசகர் கேள்வி கேட்டிருந்தார்... "நாற்பது வருஷ மாக உங்களைத் தொடர்ந்து படித்து வருகிறேனே... என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர் கள்?" என்று.
நீண்ட யோசனைக்குப் பிறகு பதில் அளித்தேன்... "நாற்பது வருஷம் உங்களைத் தொடர்ந்து படிக்க வைத்திருக்கிறேனே, என்னைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதேதான்!" என்று. என் எழுத்து, என்னைப் பல தேசங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. பல வகைப்பட்ட மனிதர்களைச் சந்திக்க வைத்திருக்கிறது. பிரைவேட் ஜெட்டி லிருந்து ஃப்ரீமாண்ட் மிஷன் பீக் மலை யுச்சி மாளிகை வரை அனுமதித்திருக்கிறது. பெயர் தெரியாத வாசகர்கள் நள்ளிரவில் கூப்பிட்டுப் பாராட்டியிருக் கிறார்கள். மனைவிமார்கள் அழுதிருக்கிறார்கள். கணவன்கள், மனைவிகள் மேல் சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்து கொள்ளுமுன், கடைசி ஆறுதலுக்கு என்னை விளித்திருக்கிறார்கள். ‘ரோஜா’ வெளிவந்த சமயத்தில், பெங்களூருக் குத் தனியாக ஓடி வந்த இளம்பெண் அதிகாலை ஜலஹள்ளியில், ‘அரவிந்த சாமியுடன் என்னை மண முடி!’ என்று கதவைத் தட்டி யிருக்கிறாள். "ஆ" கதையைப் படித்துவிட்டு, "என் மகளை மணம் செய்துகொள்ள வேண் டும்" என்று திருநெல்வேலில் இருந்து வந்த மனநிலை சரியில்லாத இளைஞரும், ‘பாலம்’ கதையைப் படித்து விட்டு என்னைக் கொல்ல வர தேதி கேட்டிருந்த கோவை வாசியும் என் வாசகர்கள்தான். வாழ்க்கையின் அத்தனை பிரச்னைகளுக்கும், முதுகுவலியில் இருந்து முண்டகோபனிஷத் வரை யோசனை சொல்லியிருக்கிறார்கள்; கேட்டிருக்கிறார்கள். மிகச் சிறந்த நண்பர்களையும், அற்புதக் கணங்களையும் என் எழுத்தால் பெற்றிருக்கிறேன். அதுதான் என்னுடைய நோபெல்!

நன்றி: ஆனந்த விகடன் / http://www.desikan.com/blogcms/?item=63

Labels: ,

Thursday, February 21, 2008

கண்ணதாசன் காரைக்குடி பேரசைசொல்லி ஊத்திக்குடி

படம்: அஞ்சாதே
ஒலிப்பதிவு: மஹேஷ் முத்துஸ்வாமி
கலை: அமரன்
இயக்கம்: மிஸ்கின்
நடனம்: பாபி தினா
பாடல்: கபிலன்
இசை: சுந்தர் C. பாபு
***

2008ன் முதல் ஹிட் பாடல்?!

கண்ணதாசன் காரைக்குடி
பேரைச்சொல்லி ஊத்திக்குடி
குன்னக்குடி மச்சானைப்போல் பாடப்போறேன்டா
கண்ணாடிக் கோப்பையில கண்ணமூடி நீச்சலடி
ஊருகாயத் தொட்டுக்கிட்டாத் ஓடிப்போகும் காய்ச்சலடி

போதை என்பது ஒரு பாம்பு விஷம்தான்
சேர்ந்து குடிச்சா அது ஒரு சோஷலிசம்தான்
(கண்ணதாசன் காரைக்குடி)

பொண்டாட்டி புள்ளைங்க தொல்லையில்லா இடம்தானே
இந்த இடம் இல்லையின்னா சாமிமடம்தானே

மேஸ்திரி கடல்ல கலந்து குடிக்கிறாரே
சித்தாளு பொண்ணை நினைச்சு இடிக்கிறாரே
இயக்குனர் யாரு அங்க பொலம்புறாரு

நூறு மில்லியை அடிச்சா போதையில்லையே
நூறைத் தாண்டுனா நடக்க பாதையில்லையே

(கண்ணதாசன் காரைக்குடி)

அண்ணனும் தம்பியும்
எல்லாரும் இங்கே வந்தா டப்பாங்குத்துதானே
ஓவரா ஆச்சுன்னா வெட்டுக்குத்துதானே

எங்களுக்கு தண்ணியில கண்டமில்ல
எங்க்ளுக்கு ஜாதிமதம் ரெண்டுமில்ல

ரோட்டுக்கடையில மனுஷன் ஜாலியைப்பாரு
சேட்டுக்கடையில மனைவி தாலியைப் பாரு

(கண்ணதாசன் காரைக்குடி)

கண்ணாடிக் கோப்பையில கண்ணமூடி நீச்சலடி
ஊருகாயத் தொட்டுக்கிட்டாத் தொலையும் காய்ச்சலடி
போதை என்பது ஒரு பாம்பு விஷம்தான்
சேர்ந்து குடிச்சா அது ஒரு சோஷலிசம்தான்

(கண்ணதாசன் காரைக்குடி)

Labels:

Monday, February 18, 2008

மடிப்பாக்கம் - 25 வருடங்கள் ஓடியாச்சு!

மடிப்பாக்கத்தில் நாங்கள் குடிபெயர்ந்து இன்றோடு (18-பிப்ரவரி) 25வருடங்கள் ஆகிறது.

ஆரம்பத்தில், 1982ல், மடிப்பாக்கத்திற்கு நான் வரத் தயங்கியதற்கு முக்கிய காரணம், அங்கிருந்து என் பள்ளி அதிக தூரம் என்பதாலும்; வீடுகள் மிக அரிதாகத்தான் கண்ணில் தென்பட்டமையால், எனக்கு விளையாட நண்பர்களே கிடைக்கமாட்டார்கள் என்பதாலும். தவிர, முதன்முதலாக எனது அப்பா, நாங்கள் வீடு எழுப்ப திட்டமிட்ட இடத்தை எனக்குக் காட்டியபோது நான் சற்றே ஒரு சிறு அதிர்ச்சிக்குள்ளானேன் - அது ஒரு பெரிய வயல் கிணறாக இருந்து மூடப்பட்ட ஒரு இடம்.. பெரிய பள்ளமாகக் காட்சியளித்த அந்த இடத்திலா நாம் வீடு கட்டிக் குடிபுகப்போகிறோம் என்று எனக்கோ உள்ளூர ஒரு பயம்.

மடிப்பாக்கத்தில் நாங்கள் புதுவீடு கட்டிக்கொண்டு குடிபெயரப்போவது உறுதியான சூழலில் என் அப்பா, ஆறாம்வகுப்பு படித்துக்கொண்டிருந்த என்னைச் சமாதானப்படுத்த சொன்னது இதுதான் - "இங்கு உனக்கு கிரிக்கெட் விளையாட நிறைய மைதானங்களும் நண்பர்களும் இருக்கிறார்கள்; அதனால் நீ கவலைப்பட வேண்டாம்".

உண்மைதான்.. அன்றைய மடிப்பாக்கத்தில் பரவலாகக் காணப்பட்ட vacant plotகள் எல்லாம் எங்களுக்கு கிரிக்கெட் விளையாடுவதற்கு ஏதுவாக அமைந்த அருமையான மைதானங்கள்தான்.

இது ஒருபுறமிருந்தாலும், பாலையா நகரில் நாங்கள் குடிபுகுந்த துவக்க நாட்களில், எங்கள் வீட்டில் (ஏன், எங்கள் ஏரியாவிலேயே கூட) மின்சார வசதி கிடையாது. அதனாலெல்லாம், நானும் ராஜாஜியைப் போல் தெருவிளக்கில்தான் படித்தேன் என்று புருடா எல்லாம் விடமாட்டேன். பள்ளிக்கூடத்தில் நான் குறைவான மதிப்பெண்கள் வாங்கியதற்கு அதுவே ஒரு சாக்காக அமைந்துவிட்டது என்றே சந்தோஷப்பட்டேன். மின்சார வசதி வந்தும்கூட எனது படிப்பின் out of form தொடர்ந்தது வேறு கதை.

அன்றைய நாளில், பாக்கெட் நாவல்களும், மாயாஜால கதை புத்தகங்களும், அம்புலிமாமாக்களும், பாலமித்ராக்களும், இன்ன பிற காமிக்ஸ்களும், Sportstarகளும் பள்ளிக்கூட பாடங்களைவிட அதிக கவனத்தை ஈர்த்த புத்தகங்கள். மாந்தோப்பு, ஏரிக்கரை கிரிக்கெட்டு, முருகன் கோவில் பால்குடம், அம்மன் கோவில் கூழ் ஊற்றுதல், ஐயப்பன் கோவில் அன்னதானம் என்று எதுவாக இருந்தாலும் பனைமர ஏறி நொங்கு திருடித் தின்ற காலத்தில் நமது சந்தோஷங்கள் எல்லாமே ஏரியா நண்பர்களைச் சார்ந்தே இருக்கும்.

மின்சார வசதியில்லாததால், 1983 உலகக்கோப்பைக் கிரிக்கெட் இறுதிப்போட்டியின் நேர்முக வர்ணனையை டிரான்ஸிஸ்டரில்தான் கேட்கவாய்த்தது... பின்னாட்களில், தூர்தர்ஷன்தான் எங்களுக்கு கிரிக்கெட்டைப் பார்க்கவும், அதுபற்றி பேசவும், கொஞ்சம் ஹிந்தி கற்றுக் கொள்ளவும் (ச்சார் ரன் கே லியே!) உதவியது. கண்மணிப் பூங்காவில் ஆரம்பித்து வயலும்வாழ்வும், வாழ்க்கைக் கல்வி, செவ்வாய் கிழமை நாடகம், புதன் சித்ரஹார், வெள்ளிக் கிழமை ஒலியும் ஒளியும் என்று தூர்தர்ஷனைத்தான் நாங்கள் தரிசித்துக்கொண்டிருந்தோம். 'ஹம் லோக்' என்ற ஹிந்தித் தொடர் நீங்கலாக ஹிந்தி சமாசாரங்களைக் காண்பதில்லை என்ற கொள்கையோ என்னவோ, தூர்தர்ஷனில் 'தேசிய நிகழ்ச்சிகள்' என்ற ஸ்லைடை காண்பித்தவுடனேயே டிவியை அணணத்துவிடுவோம். அதுசரி, இப்போதும் 'தடங்கலுக்கு வருந்துகிறோம்' ஸ்லைடைக் காண்பிக்கிறார்களா என்ன? Satellite channelகள் இல்லாத அந்த காலகட்டம், நாம் வாழ்ந்த சமூகத்தில் பரவலாக எல்லா சுற்றத்தாருடனும் குறிப்பாக நம் பள்ளித் தோழர்களுடனும், ஏரியா நண்பர்களுடனும் அதிக நேரத்தைக் கழிக்கவும், மகிழவும் நமக்கு பல வாய்ப்புகளைக் கொடுத்திருந்தது.

தேனினும் இனிய குடிதண்ணீர் கிடைத்த ("வாவ்! இதுக்காகவே இங்கே வீடு கட்டணமுங்க!") அந்தக்கால மடிப்பாக்கம் எங்கே... காசு கொடுத்துக் குடிநீர் வாங்கும் சென்னை நகரப் பெருநிழலில் வீழ்ந்துவிட்ட இன்றைய மடிப்பாக்கம் எங்கே?

மடிப்பாக்கம் கூட்டு ரோடு, பொன்னியம்மன் கோவில், கூட்டு ரோட்டிலிருந்து பாதாள விநாயகர் கோயிலுக்குச் செல்லும் சாலையில் ஒரு கீத்து கொட்டகையில் அமைந்த தனலஷ்மி திரையரங்கம், பொன்னியம்மன் கோயில் அருகில் உள்ள கோழிப்பண்ணை, மடிப்பாக்கம் ஏரி, அதனருகில் ஐயப்பன் கோவில்.. இவையெல்லாம்தான் அன்றைய மடிப்பாக்கத்தில் பிரச்சித்திபெற்ற landmarkகள்.

சைதாப்பேட்டைக்கும் மடிப்பாக்கம் பொன்னியம்மன் கோயிலுக்கும் இடையே ரொம்ப அரிதாக ஷண்டிங் அடித்த M11 என்ற மினி பஸ்தான் மடிப்பாக்கத்தினுள் நுழைந்த முதல் பேருந்து என நினைக்கிறேன். ஒரு ஏரோப்பிளேனை வேடிக்கைப் பார்ப்பது போல, கிரிக்கெட் விளையாடுவதை ஒரு கணம் நிறுத்திவிட்டு பார்ப்போம்; வெகுதொலைவில் பார்த்த அந்தப் பேருந்து, அருகில் வரும்போது உற்று நோக்குவோம்... நமக்குத் தெரிந்தவர்கள் யாராவது வருகிறார்களா, இல்லை, நம்ம வீட்டுக்குத்தான் யாராவது வருகிறார்களா என்று எங்கள் எண்ண அலை ஓடும். எப்படியும் பேருந்திலிருந்து ஒரிரு புதியவர்கள் (strangers) இறங்கி ஊருக்குள் அடியெடுத்து வரும்போது எங்களிடம், `தம்பி, இந்த அட்ரஸ் எங்க இருக்கு’ என்று விசாரிக்காமல் செல்லமாட்டார்கள். எங்களுக்குப் புரிந்துவிடும், அவர் சாதாரண ஸ்ட்ரேஞ்சர் அல்லர்; ஏரியாவில் புதிதாகப் பிளாட் வாங்கியவர், அல்லது, வாங்கப்போகுபவர்; எங்களது இந்த யூகம் தொண்ணூரு சதவிதம் சரியாகத்தான் இருக்கும். அப்படி விசாரித்து வந்தவர்கள், பலர் இன்று, மாடி மேல் மாடி கட்டி, குடும்பமும் விஸ்தாரமாகி, புதிய தலைமுறைகள் உருவாகி...அப்பப்பா!... என்னே மாற்றங்கள் நம் மடிப்பாக்கத்தில், இன்று காணும்போது!

அந்தக்காலத்தில்...அதாவது 1983-84வாக்கில், வேளச்சேரி வழியாக மடிப்பாக்கத்தினுள் பேருந்தைக் கொண்டுவரவே பிரம்மப் பிரயத்தனம் பண்ணவேண்டியிருந்தது நினைவுக்கு வருகிறது. குடியிருப்போர் நலச் சங்கம் ஆரம்பித்து, அதற்கு ஆள் சேர்த்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை எல்லாம் ஒரு பொதுக்கூட்டத்திற்கு வரவழைத்து, சினிமா நடிகை நளினியை சிறப்பு விருந்தினராக அழைத்து (நம்ப ஊர் மக்களைத் திரட்ட பட்டபாடு இருக்கே...!)..ஒரு பெரிய ‘மாஸ்’ காட்டி, ரொம்பவும் லோல்பட்டபிறகுதான் வேளச்சேரி வழியாக பஸ் வர ஆரம்பித்தது என்று தோன்றுகிறது.

இன்னொரு விஷயம் - பொன்னியம்மன் கோயில் கிணறு.. அதனருகில் பதிக்கப்பட்டுள்ள கல்வெட்டு வாசகங்கள் - எம்.ஜி.ஆர் ஆலந்தூர் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தபோது திறந்து வைத்த கிணறு எனப் பறைசாற்றும். எனக்குத் தெரிந்து மடிப்பாக்கத்தில் மிகவும் பழையவீடு என்றால், பொன்னியம்மன் கோவிலுக்கு வலதுபுறத்தில் அமைந்த ஒரு வீடு... காம்பவுண்ட் சுவற்றில் `விஸ்வநாதன்’ என்று போட்டிருந்ததாக நினைவு.

கடந்த சில வருடங்களில், மடிப்பாக்கத்தில் ரியல் எஸ்டேட் மதிப்பு பன்மடங்கு அதிகரித்திருப்பதைப் பார்க்க முடிகிறது; கல்யாண மண்டபங்கள், பள்ளிக்கூடங்கள், கோவில்கள், மருத்துவமனைகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் என பல முளைத்து, நிலத்தடி நீரைக் குடிநீராகப் பயன்படுத்த இயலாத நிலைக்கு கொண்டுயே ஒரு பத்து வருடங்கள் ஆகிறது.

முன்பெல்லாம், ஒரு ஃபோன் பண்ணவேண்டுமென்றால், ஒரு 2-3 கிலோமீட்டர் வரை செல்ல வேண்டியிருந்தது; 1990களின் இறுதியில், தடுக்கிவிழுந்த இடங்களிலெல்லாம் STD-PCOக்கள் காணப்பட்டன. இன்றைய மடிப்பாக்கத்திலோ, காண்போர் கையிலெல்லாம் ஒரு செல்போனைப் பார்க்கமுடிகிறது. ஒரு வங்கிகூட இல்லாதிருந்த மடிப்பாக்கத்தில் இன்று ஏழெட்டு வங்கிகள்; தவிர எனக்குத் தெரிந்தே ஒரு 7-8 ATMகள்.

முன்பெல்லாம் எங்கள் பகுதிக்கு யாராவது புதியவர்கள் வந்தால் ஏரியாவே வைத்தகண் வாங்காமல் அவர்களையே உற்று நோக்கும். இப்போதோ, ஒரே ஃபிளாட்டில் வசித்து வந்தாலும் ஒருவரை ஒருவர் தெரியாத அளவிற்கு ஒரு அன்னியோன்னியமற்ற நகர்ப்புர கலாச்சாரத்தில் சிக்கி தன் சுயமிழந்த மற்றுமொரு புறநகர்ப்பகுதி என்ற அளவில் மடிப்பாக்கம் இருக்கிறது.

மாசடைந்த காற்று, சாக்கடைகள், குப்பைக்கூளங்கள், பெருகிவிட்ட ஜனத்தொகை, வாகனப்பெருக்கம், நெரிசல்மிகு சந்திப்புகள் நிறைந்த ஒரு பெருநகரின் இயந்திர வாழ்க்கைக்குப் பழகிவிட்ட அவசர யுக மனிதர்கள் நிறைந்த ஒரு developed suburbஆகத்தான் மடிப்பாக்கம் எனக்குத் தெரிகிறது.

Labels: ,

Sunday, February 17, 2008

சென்னையில் பிலிப்பினோ திரைப்பட விழா filipino film festival @ chennai

சென்னையில் தற்போது ஏதாவது திரைப்படவிழா நடைபெறுகிறதா என்று மேய்ந்தபோது, என் கண்ணில்பட்ட செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

புதுடில்லியின் பிலிப்பினோ தூதரகம் மற்றும் சென்னைத் திரைப்பட கழகம் ஆகியவற்றுடன் இணைந்து சென்னையில் உள்ள Indo Cine Appreciation Foundation (ICAF) அமைப்பு நடத்தும் இந்த பிலிப்பினோ திரைப்பட விழா நாளை பிப்ரவரி 18 முதல் பிப்ரவரி 27 வரை South Indian Film Chamber திரையரங்கில் (606, அண்ணா சாலை) நடைபெறவுள்ளது.

இந்தத் திரைப்படவிழாவில் காண்பிக்கப்படும் பிலிப்பினோ திரைப்படங்கள்:
Inang Yaya (18-பிப்ரவரி மாலை 6:30)
Dekada (19-பிப்ரவரி மாலை 6:30)
Muro Ami (20-பிப்ரவரி மாலை 6:30))
Bata Bata Paano Ka Ginawa (21-பிப்ரவரி மாலை 6:30)
Jose Rizal (22-பிப்ரவரி மாலை 6:30)
Magnifico (23-பிப்ரவரி மாலை 6:30)
Mano Po (24-பிப்ரவரி மாலை 6:30)
Panaghoy Sa Sub (25-பிப்ரவரி மாலை 6:30)
Till I Met (26-பிப்ரவரி மாலை 6:30)
Kasal, Kasali, Kasalo (26-பிப்ரவரி மாலை 7:45)
Aishite Imasu (27-பிப்ரவரி மாலை 6:15)
Matakot Ka Sa Karma (27-பிப்ரவரி மாலை 7:45)


ICAF அமைப்பின் செயலர் திரு. தங்கராஜ் அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது, இந்த ICAF அமைப்பில் உறுப்பினராக ஒரு போட்டோவும் ஆண்டொன்றுக்கு ரு।550 பணமும் கொடுத்தால் போதும் என்றும் ஒவ்வொறு மாதமும் குறைந்தபட்சம் ஒரு பத்து வெளிநாட்டு படங்களைக் காணலாம் என்றும் சொன்னார். கடந்த மாதங்களில், பின்லாந்து, தென்னாப்பிரிக்கா நாட்டு புகழ்பெற்ற திரைப்படங்கள் திரையிடப்பட்டதாகச் சொன்னார்.

ஆர்வலர்கள், இது குறித்த மேல்விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவேண்டிய எண்கள்: 044 249 58691 மற்றும் 98401 51956। மின்னஞ்சல்: thangaraj_icaf@hotmail.com

Labels: ,

Thursday, February 14, 2008

காதல் வாழ்க

1. ஒரு ஆணும் பெண்ணும் நெருக்கமாகப் பழகினால், உடனே அது காதலாக இருக்குமென்று எடுத்துக்கொள்ளக்கூடாதாம், ஏனென்று கேட்டால், “அவர்கள் நல்ல நண்பர்களாகவோ, அல்லது அலுவலகத் தோழர்களாகவோ இருக்கலாம் இல்லையா? அவர்கள் தமிழிலக்கியம் பற்றியோ அல்லது ஐ.டி. துறையின் எதிர்காலம் பற்றியோகூட பேசிக்கொண்டிருக்கலாம் இல்லையா? ரொமான்ஸ் பண்ணுகிறார்கள் என்று எப்படி தடாலடியாக முடிவுக்குவரலாம்?" என்கிறார்கள்.

2. பைக்கிலோ, சைக்கிளிலோ, ஒரு பெண்ணையும், ஆணையும் ஒரு சேரப் பார்த்தாலோ அல்லது அலுவலக இடைவேளைகளிலோ, டிஸ்கோத்தேவிலோ, பீஸா ஹட்டிலோ, கையேந்தி பவனிலோ, இன்ன பிற பொது/தனி இடங்களிலோ மணிக்கணக்கில் சிரித்துசிரித்துப் பேசி அரட்டை அடிக்கும் ஜோடிகளைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர்கள் இருவரும் காதல் ஜோடிகள் என்று முடிவுக்கு வந்துவிடக்கூடாதாம்.

சரி, அப்படியானால், எப்போதுதான் காதலர்கள் காதலிக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்வீர்கள்? சினிமாவில் வருவதுபோல விதவிதமான உடைகள் அணிந்து பற்பல இடங்களில், செட்டிங்ஸ்போட்டு ஆடிப் பாடினால்தான் அது காதல் என்று ஒத்துக்கொள்வார்களோ?

எது எப்படியோ, இன்றைய நுகர்வுகலாச்சார யுகத்தில், காதலுக்கு உரிய மரியாதை தருவது சினிமா மட்டும்தான்; அது வியாபார நோக்கில் என்றாலும், பல கவிஞர்களை, பல அசிஸ்டெண்ட் டைரக்டர்களை, பல வசனகர்த்தாக்களை காதலைப் பற்றி சிந்திக்கச் செய்கிறது; காதலர்களுக்காகப் பரிந்து பேச வைக்கிறது. நிஜவாழ்க்கையில் என்னவோ, பெற்றோர்கள் எல்லாக்காலத்தையும் போலவே காதலை அங்கீகரிக்க மறுக்கின்றனர்; காதலை 'சீச்சீ' என்றே பார்க்கின்றனர்.என்னமோ தெய்வகுத்தம் வந்தாற்போல் குதிக்கின்றனர். போதாக்குறைக்கு இந்த சாதி மத பேதங்கள் வேறு. இந்த பேதங்களை உடைத்தெரியவே காதல் திருமணங்கள் பெருக வேண்டும்.

காதலர் தினத்திற்கு அங்கீகாரம் தரும் வியாபார சமூகம் உண்மையில் காதலுக்கும் அங்கீகாரம் கொடுத்தால் நன்றாக இருக்கும். இல்லாவிட்டால், ‘ரோஜா வியாபாரிகளாவது வாழட்டும்’ என்று சொல்வதுபோல, ‘வாலண்டைன்ஸ் டேய்’ வாழ்த்து அட்டைகளையும், சிறப்பு பொக்கேக்களையும் விற்கும் ஏழை விற்பனர்களும் முகவர்களுமாவது வாழட்டும் என்ற அளவில் காதலர் தினங்கள் நின்றுவிடும்.

எது எப்படியோ, இந்தக் காதலர் தினத்தில் காதலுக்கும், ஏழை வியாபாரிகளுக்கும் என் வாழ்த்துக்கள்! :)

Labels: ,

Tuesday, February 12, 2008

நடிகை லட்சுமியின் முதல் கணவர் மரணம்


எஸ். பாஸ்கரன் (மறைந்த டி.கிருஷ்ணய்யரின் மகன்), முன்னாள் நியூ இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனியின் ஊழியர், 2008 பிப்ரவரி 3ஆம் தேதி மறைந்த செய்தி இப்போதுதான் என் கண்ணில் பட்டது.


இந்த பாஸ்கரன் இருக்காரே, ஸாரி, இருந்தாரே, அவர் என் அப்பாவின் அலுவலக சக ஊழியர், ரொம்ப காலத்திற்கு முன்னர். மூன்று மணங்கள் புரிந்துகொண்ட புகழ்பெற்ற தென்னிந்திய நடிகை லட்சுமி, முதலில் திருமணம் செய்து கொண்டது இவரைத்தான். இவர்தான் நடிகை ஐஸ்வர்யாவின் தந்தையும்கூட.

நியூ இந்திய இன்சூரன்ஸ் கம்பெனியில் ஒரு உயர் அதிகாரி பதவியில் இருந்து சிலகாலம் முன்னர் ஓய்வுபெற்றார். இவர் பற்றிய பிற விவரங்கள் எனக்குத் தெரியாது.

அன்னாருக்கு என் அஞ்சலி.

Labels:

Sunday, February 10, 2008

பழமுதிர்சோலை நமக்காகத்தான்


முருகபெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான (6வது படைவீடு) பழமுதிர்சோலைக்கு சென்று முருகக் கடவுளைத் தரிசிக்க வேண்டும் வேண்டும் என்று கடந்த பல வருடங்களாக நான் நினைத்தது இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் நிறைவேறியது. மற்ற ஐந்து படைவீடு கோவில்களைப் போல இந்தக் கோவில் அத்துணை பிரம்மாண்டமான தோற்றத்தைக் கொண்டிருக்கவில்லை. தவிர, இங்குள்ள இறைவனுக்கு பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தும் வழக்கம் இல்லையோ என்னவோ.. ஒரு மொட்டைத்தலை கூட என் கண்ணில் படவில்லை. ஐந்து படைவீடுகளிலும் முடிகாணிக்கை செலுத்திய எனக்கு, ஆறாவதுபடை வீடான பழமுதிர்சோலையிலும் முடிகாணிக்கை செலுத்தவேண்டும் என்ற எனது வேண்டுதல் இன்னும் நிறைவேறாமலேயே உள்ளது.

மலை மீது அமைந்திருந்த இந்த ஆலயத்திலிருந்து இன்னும் சற்று மேலே மேலே நடந்தால், நூபுர கங்கை என்ற சிற்றறுவி விழும் இடம் இருப்பதைக் காணலாம்ம். இந்த அருவியில் தண்ணீர் குறைவாகவே வரும் என்பதால் அருவி நீரைத் தேக்கிவைத்து, குளிப்பதற்கு ஏதுவாக குழாய் வசதி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன்னர் நான் இங்கு வந்திருந்த போது இந்த குழாய் வசதி இருந்ததாக நினைவில்லை. அதேசமயம், மலையில் ஏறிச்சேலும் பாதை நெடுகிலும், கோவிலிலும் மற்றும் நூபுர கங்கை மண்டபத்திலும் ஏராளமாகக் காணப்படும் குரங்குகள்; அவை படுத்தும்பாடு இருக்கே... மறக்கமுடியாதவை. இந்த குரங்குகளுக்கு பயந்தபடியே நடந்த என் ஏழுவயது மகளை சமாதானப்படுத்தவே போதும்போதும் என்றாகிவிட்டது. 'சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா?' என்று கேட்டு, மரத்திலிருந்து பழங்களை உதிரச்செய்து அவ்வைப் பிராட்டியாருக்கு பாலமுருகன் பாடம் நடத்திய திருத்தலம் இதுதான் ('பழம் உதிர் சோலை' - பழமுதிர்சோலை).

குரங்குகளுக்கு ரொம்பவே பயந்தபடியே நடந்த என் மகளை 'ஏண்டி ரொம்ப ஓவராப் பண்ற' என்று செல்லமாக அதட்டிக்கொண்டே வந்த எங்கள் முன்பாக திடுக்கென்ன குதித்த குரங்கொன்று எங்களிடமிருந்து பழத்தை சுட்டு எங்களுக்குப் பாடம் புகட்டியது இந்தப் பயணத்தின் மறக்கமுடியாத விஷயம்.


பழமுதிர்சோலை ஆலயம்


ஆலய நுழைவாயில் சிலம்பாறு/நூபுரகங்கைக்கு செல்லும் பாதை

இந்த நூபுர கங்கை/சிலம்பாற்றுத் தீர்த்தத்தில் பல நோய்களையும் குணப்படுத்த வல்ல இரும்புச் சத்து, தாமிரச் சத்து முதலியவையோடு பல மூலிகை மருத்துவச் சிறப்புகள் நிறைந்திருப்பதாகவும் நம்பப்படுகிறது.


Labels: